பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம்
சென்னை: தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் குழுவின் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலைப் படிப்புக்கு நடத்த திட்டமிட்டுள்ள நுழைவுத் தேர்வை கைவிடக்கோரி தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர், இவ்வாறு தேர்வு நடத்துவது மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்று தமிழக அரசு கருதுவதாகக் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு 2022-2023ஆம் கல்வியாண்டு முதல், மானியக் குழுவின் நிதி உதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சியூஇடி) மூலம் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இதையடுத்து 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில், 80 விழுக்காட்டு மாணவர்களுக்கும் மேலானவர்கள் மாநிலப் பாடத்திட்டங்களில் பயின்று வருபவர்கள்தான் என்றும் இவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
"என்சிஇஆர்டி. பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வு மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்குத் தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதோடு, இந்தச் சூழ்நிலை நம் நாட்டில் உள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்கள், அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும்.
"இந்த நுழைவுத் தேர்வும், நீட் தேர்வைப் போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக்கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு, மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறு ஒரு நுழைவுத் தேர்வினை செயல்முறைக்கு கொண்டு வருவதால், பள்ளிக்கல்வியோடு பயிற்சி மையங்களையும் நாடும் மாணவ சமுதாயத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவர் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் தாக்கல் செய்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

