திண்டுக்கல்: நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
இது நில நடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வா அல்லது பாறைகளுக்கு வைக்கப்பட்ட வெடிகள் வெடித்ததால் ஏற்பட்ட அதிர்வா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கீரனூர், கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு வேளையில் நில அதிர்வு உணரப்பட்டது.
அப்போது பல வீடுகளின் மேற்கூரையில் இருந்து ஓடுகள் விழுந்ததாகவும் வீட்டுக்குள் இருந்த பொருள்கள் அசைந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் சில வீடுகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் செல்ல அஞ்சி, பல மணிநேரம் வீதியிலேயே காத்துக்கிடந்தனர்.
இந்நிலையில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாறைகளுக்கு வெடி வைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த அப்பகுதி கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். நில அதிர்வின்போது பெரும் சத்தம் கேட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதற்கான கராணம் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிலநடுக்கம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

