திருவண்ணாமலை: சமூக ஊடகத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பல லட்சக்கணக்கில் பணம் பறித்த ஆடவரிடம் ஆரணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்காக, ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது பாலாஜி என்பவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளார் ஆரணியைச் சேர்ந்த 24 வயது பயாஸ்.
சமூக ஊடகத்தில் பாலாஜியின் நண்பர் அதனைப் பார்த்துவிட்டு அவரிடம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து தமது படத்தைப் பயன்படுத்தும் உண்மையான நபர் யார் என அவர்கள் கண்டுபிடித்தனர்.
பின்னர் இளம்பெண் போல் பயாசுக்கு குறுஞ்செய்தி அனுப்பி குறிப்பிட்ட இடத்திற்கு அவரை வரவழைத்தனர்.
பயாசை நேருக்கு நேர் சந்தித்த பாலாஜி, "எனது புகைப்படத்தைப் பயன்படுத்தி நீ பல பெண்களிடம் ஏமாற்றி பணம் பறித்து வருவதால், எனக்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே, உடனடியாக படத்தை அகற்றிவிடு," எனக் கூறியுள்ளார்.
அப்போது பாலாஜியை பயாஸ் கையால் தாக்கி கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்து
உள்ளார்.
இதுதொடர்பாக, ஆரணி டவுன் காவல்நிலையத்தில் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில், பயாசை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் இவரிடம் ஏமாந்துள்ளது தெரியவந்தது.
சில பெண்களிடம் ஆபாசமாக பேசும் குரல் பதிவைக் கொண்டு மிரட்டி பணம் பறித்துள்ளார்.
இதனையடுத்து பயாஸ் மீது
4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை ஆரணி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி போளுர் கிளை சிறையில் அடைத்தனர்.

