சென்னை: அதிமுக உடன்பிறப்புகளில் பெரும்பாலானோரின் ஆதரவு தனக்கு உள்ளது என்று கூறுகிறார் சசிகலா.
அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கியது செல்லும் என்று சென்னை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அவர் இதனைக் கூறினார்.
சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கும் தீர்மானம், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவை இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது.
ஆனால், அதனை எதிர்த்து சென்னை சிவில் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
"நான் அரசியலில் இருப்பதும் இல்லாமல் போவதும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் எடுக்கக்கூடிய முடிவு. தனிநபராக யாரும் என்னிடம் அதை சொல்ல முடியாது.
"மேலும் தமிழக மக்களும் தொண்டர்களும் விரும்புபவர்களை அரசியலில் இருந்து விரட்ட முடியாது.
"அத்துடன், அதிமுகவின் உடன்பிறப்புகளில் பெரும்பாலானோரின் ஆதரவு எனக்கு உள்ளது. மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெற்றிபெறும். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மாற்றம் வரும்," என்றார் சசிகலா.
சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்
இதற்கிடையே, சசிகலா பற்றி கட்சியினர் யாரும் விமர்சிக்க வேண்டாம் என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், இபிஎஸ் கூறியுள்ளனர்.
"சசிகலாவுக்கும் கட்சிக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என்று ஆகிவிட்டது.
"எனவே, கட்சியினர் யாரும் இனி அவரைப் பற்றி, பொதுவெளியில் பேசவோ, விமர்சிக்கவோ வேண்டாம்.
"அவ்வாறு பேசினால், அதனை அவர் சாதகமாக எடுத்துக்கொள்ளக் கூடும். மேலும், அவரின் கருத்துகளுக்கும் யாரும் பதிலளிக்க வேண்டாம்," என்று அவர்கள் கூறினார்கள்.

