காஞ்சிபுரம்: ஆலயம் ஒன்றில் படிக்கட்டாகப் பயன்படுத்தப்படும் கல்வெட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன், "உத்திரமேரூர் அருகே உள்ள மலையான்குளம் கிராமத்தில் 12, 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு கல்வெட்டு களைக் கண்டறிந்தோம். இவை முதலாம் குலோத்துங்க சோழர்கள் காலத்தைச் சார்ந்ததாகும்.
'சுங்கம் தவிர்த்த சோழன்' என்று வரலாற்றில் அறியப்படும் முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியின் கீழ் உத்திரமேரூர் சிறிது காலம் இருந்துள்ளது.
"இவரது 47வது ஆண்டு ஆட்சியை இந்தக் கல்வெட்டு செய்தி குறிக்கிறது.
"இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுகூற்ற நல்லூர், தற்போது சிறுமயிலூர் என வழங்கப்படும் ஊராக இருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து மேலும் ஆய்வு செய்ய உள்ளோம்.
"இந்தக் கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு. இது தற்போது சிவாலயத்தில் படிக்கட்டாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதைப் பாதுகாக்க வேண்டும்," என்றார்.

