சென்னை: சட்டப் பேரவையில் பேசிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டில் மூன்று லட்சத்துக்கும் மேல் அரசுப் பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதனைச் சரி செய்யும் வகையில் டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழக அரசுப் பணிகளுக்கான தேர்வு ஆணையம், தேர்வுகளை எவ்வாறு நடத்துவது, தேர்வுக்கு எத்தகைய பயிற்சிகளை வழங்குவது, தேர்வு முறையில் உள்ள குளறுபடிகளை எவ்வாறு சரிசெய்வது உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுசெய்ய, தமிழக அரசு தனி நிபுணர் குழுவை அமைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த நிபுணர் குழு தற்போது ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், ஆறு மாத காலத்திற்குள் இக்குழு அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசுத் தேர்வு முறை மற்றும் அரசு வேலைவாய்ப்பில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு, அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்" என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.
"அரசுப் பணிகளில், சில இடங்களில் கூடுதல் ஊழியர்கள், சில இடங்களில் யாருமே இல்லாத நிலை இருப்பதால், தேர்வு முறை, பயிற்சி, பதவி உயர்வு என எல்லாவற்றையும் மறுஆய்வு செய்ய, சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது," என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

