செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
131197db-bc95-4ad0-bdb7-12c0570f5450
-

நியாயவிலைக் கடையில் மோடியின்

படத்தை மாட்டிய பாஜக தலைவர்

கோவை: கோவையில் உள்ள ஒரு நியாய விலை கடைக்குச் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கு பிரதமர் மோடியின் படத்தை சுவரில் தொங்கவிட்டுச் சென்றார். அங்கு ஏற்கெனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடப்பு முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது படங்கள் இருந்தன. சில மாதங்களுக்கு முன்பு கோவையில், பாஜக ஆதரவாளர் ஒருவர் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படத்தை வைத்தார். இதையடுத்து அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக பாஜக ஆதரவாளர் மீது வழக்குப் பதிவானது. அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அண்ணாமலையும் அதேபோல் செய்துள்ளார்.

கனிமவள கடத்தலுக்கு எதிராக தொடர்ந்து போராட சீமான் உறுதி

சென்னை: தமிழகத்தில் உள்ள கனிம வளங்களைக் கொள்ளையடித்து கேரளாவுக்குக் கடத்தும் கொடுஞ்செயலுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சி நிர்வாகிகள் மீது வழக்குத் தொடுத்து அடக்குமுறையை ஏவும் தமிழக அரசின் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "தமிழகத்தில் கனிமவளங்களைக் கடத்தியதற்காக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரூ.2 கோடி அபராதம் வசூலிக்கப் பட்டதாக அமைச்சர் மனோ தங்கராஜ் வெளிப்படையாகக் கூறுகிறார். அந்தளவுக்குத் தலைவிரித்தாடும் கனிமவள கொள்ளையைத்தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்றார் சீமான்.

ப.சிதம்பரம்: இலங்கைக்கு ஏற்பட்ட கதி இந்தியாவுக்கும் ஏற்படும்

சிவகங்கை: மத்திய அரசு தனது தவறான கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை நமக்கு வரக்கூடிய அபாயம் உள்ளது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையின் பொருளா தாரப் பிரச்சினைக்கு நிர்வாகச் சீர்கேடும் தவறான பொரு ளாதாரக் கொள்கையைப் பின்பற்றியதும்தான் முக்கிய காரணங்கள் என்றார். அதே தவறான கொள்கைகளின் சாயல் இந்திய அரசின் கொள்கைகளிலும் கண்கூடாகத் தெரிகின்றது என்றும் மத்திய அரசால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார். "நாட்டில் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏராளமாக கடன் வாங்குகிறார்கள். கடன் வாங்கி எதற்கு செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை," என்றார் ப.சிதம்பரம்.

பள்ளிப் பாடத்திட்டத்தில் சீட்டாட்டம் குறித்த பாடம்: அன்புமணி புகார்

சென்னை: தமிழக மாநிலப் பாடத் திட்டத்தின் ஆறாம் வகுப்பு கணிதப் பாட நூலில் 'முழுக்கள்' என்ற தலைப்பிலான பாடத்திட்டத்தில் சீட்டுக்கட்டுகளைக் கொண்டு ரம்மி ஆட்டத்தை எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து விளக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாமக இளையரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது மாணவர்களைச் சீரழித்துவிடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். "முழுக்கள் என்ற பாடத்தின் நோக்கம் எண்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குவதாக இருக்க லாம். ஆனால், அதற்கு நல்ல உதாரணங்கள் இருக்கும் நிலையில், ரம்மி ஆட்டத்தை எடுத்துக்காட்டாக வைத்திருப்பது தவறு. இது மாணவர்களுக்கு எண்களைக் கற்றுத்தராது, ரம்மியைத்தான் கற்றுத்தரும்," என்று அன்புமணி கூறியுள்ளார்.

எட்டு மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் 29 பேர் மட்டுமே புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் மட்டுமே புதிய தொற்றுப்பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது மாநிலத்தில் 228 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாநிலம் முழுதும் 19 ஆயிரம் பேரிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. எந்த மாவட்டத்திலும் உயிரிழப்புகள் பதிவாகவில்லை. தலைநகர் சென்னையில் பத்து பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது. மாநிலத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் குணமடைந்தனர் என்று சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.