சென்னை: தமிழகத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கடத்திச் செல்லப்பட்ட ஏராளமான சாமி சிலைகள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் உள்ள சிலைகளும்கூட மீட்கப்படுகின்றன.
இந்நிலையில், தமிகத்தில் இருந்து புதுவைக்குக் கடத்திச் செல்லப்பட்ட மூன்று பழமையான சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார்.
அண்மையில் புதுவையில் உள்ள ஒரு வீட்டில் பழமையான ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர், அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அங்கு நடராஜர், வீணாதாரா சிவன், விஷ்ணு சிலைகள் இருப்பது தெரியவந்தது.
அவற்றின் மதிப்பு சுமார் ரூ.12 கோடி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் ஜோசப் கொலம்பானி என்பவர் வசித்து வந்ததாகவும் அவர் இறந்துவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. அக்குறிப்பிட்ட வீட்டில் அவரது பேரப் பிள்ளைகள் வசித்து வருகின்றனர்.
அந்தச் சிலைகளை அவர் நீண்ட காலமாக பாதுகாத்து வந்ததாகவும் அதைத் தவிர வேறு எந்தத் தகவலும் தெரியாது என்றும் அவர்கள் கூறினர்.
கைப்பற்றப்பட்ட மூன்று சிலைகளையும் முன்பு ஃபிரான்ஸ் நாட்டுக்கு கடத்திச் செல்ல முயற்சி நடந்தது தெரிய வந்துள்ளது. அவை சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனக் கருதப்படுகிறது. கடந்த 1980ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து இச்சிலைகள் திருடியிருக்க வாய்ப்புள்ளதாக டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்தார்.

