சென்னை: உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முறையாகச் செயல்பட்டால் மக்களாட்சியின் தத்துவம் மகத்தான வளர்ச்சி பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களோடு இருக்க வேண்டும் மக்களுக்காக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
உள்ளாட்சியின் எதிர்காலம் அதன் பிரதிநிதிகளின் கையில்தான் அடங்கியுள்ளது என்றும் மேயர், துணை மேயர் உட்பட அனைவரும் தங்களுக்குக் கிடைத்திருப்பதைப் பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
"1996ஆம் ஆண்டு சென்னை மேயராக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக நான் பதவியேற்றேன். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதே அதற்கு முன்பு மேயர்களின் நடவடிக்கையாக இருந்தது. அதை நான் மாற்றினேன்.
"மக்களோடு மக்களாக இருந்தால்தான் பெருமை என்ற நிலையில், அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றினேன்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகமும் மாமன்றத்தின் நடவடிக்கைகளும் சிறந்து விளங்கிட மாநகராட்சியின் சட்டங்களையும் விதிமுறைகளையும் மேயர்கள் அறிந்திருப்பது அவசியம் என்று அவர் அறிவுறுத்தினார்.
மாநில அரசின் நிதி நிலைமைக்கு ஏற்றபடி உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்று குறிப்பிட்ட முதல்வர், அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாக செலவு செய்திட வேண்டும் என வலியுறுத்தினார்.
"மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தல், சுற்றுப்புறச் சூழல் தூய்மையைப் பேணவும், நகர்ப்புற கட்டமைப்பை மேம்படுத்தவும், நேர்மையான நிர்வாகம் அமைந்திட மாநகராட்சி சட்ட விதிகளுக்கு உட்பட்டு நல்லமுறையில் செயல்படுத்தி தமிழக அரசுக்கு நல்ல பெயரை பெற்றுத் தர வேண்டும்," என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.

