தி.மலை: சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
அண்ணாமலையார் கோவிலில் சிறப்புப் பூசைகள் நடைபெற்றன. மேலும், அம்மன் சன்னதி எதிரே உள்ள சித்திர குப்தன் சன்னதியிலும் சிறப்புப் பூசைகள் நடைபெற்றதை அடுத்து, பக்தர்கள் வரிசைகளில் அலை அலையாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இரவு 11 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. இதனால் சாமி தரிசனம் மேற்கொள்ள மூன்று மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்ததாகப் பக்தர்கள் தெரிவித்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் விழா என்பதால் பாதுகாப்புப் பணியில் சுமார் 3,500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
திருவண்ணாமலையின் பல்வேறு பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

