சென்னை: தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், திமுக கூட்டணிக் கட்சி பிரதிநிதிகள் உள்பட யாரும் இதில் கலந்துகொள்ளவில்லை.
ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
"ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் நீட் விலக்கு மசோதா 210 நாட்களாக ஆளுநர் மாளிகையில் கவனிப் பாரின்றி முடங்கிக்கிடக்கின்றது. நீட் விலக்கு மசோதா முடங்கி கிடக்கும்போது, தேநீர் விருந்தில் எப்படி பங்கேற்க முடியும்? நீட் விலக்கு மசோதாவை முடக்குவது மக்களை அவமதிப்பதாகும்.
"தமிழக மக்களுக்கு நல்லது நடக்கிறது என்றால் நான் வலியையும் அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.
"ஆளுநர் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை. தனிப்பட்ட முறையில் அவருக்கும் எனக்கும் இடையே சுமூக உறவு இருக்கிறது. ஆளுநருக்கு உண்டான மரியாதையைத் தொடர்ந்து வழங்குவோம்," என்று கூறியுள்ளார்.

