ஷில்லாங்: மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நேர்ந்த கார் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் மேசைப்பந்து வீரர் விஸ்வா தீனதயாளன், 18, உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
விஸ்வாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
"பதக்கத்தோடு வருவதாகக் கூறிவிட்டு உற்சாகமாகப் போனார். உலகளவில் 100 இடங்களுக்குள் வருவதே அவரது கனவாக இருந்தது. இப்படி நடக்கும் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை," என வேதனை தெரிவித்துள்ளனர் அவரது பயிற்சியாளர்கள்.
விஸ்வாவின் தந்தை தீன தயாளன் சென்னையில் வர்த்தகம் செய்து வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்த விஸ்வாவுக்கு சிறு வயதில் இருந்தே மேைசப் பந்து விளையாட்டின் மீது தீராத ஆசை.
நேற்று நடைபெற இருந்த 83வது தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்வதற்காக விஸ்வா தீனதயாளன் அசாம் மாநிலம், கவுகாத்தியில் இருந்து நேற்று முன்தினம் டாக்சியில் ஷில்லாங் வந்து கொண்டிருந்தார். அவருடன் சக வீரர்கள் ரமேஷ் சந்தோஷ் குமார், அபினாஷ் பிரசன்னாஜி ஸ்ரீநிவாசன், கிஷோர் குமார் ஆகிய மூவரும் உடனிருந்தனர்.
இவர்களது டாக்சி, சங்பங்லா என்ற இடமருகே வந்தபோது, எதிரே வந்த 12 சக்கர சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டாக்சி மீது பயங் கரமாக மோதியதில் டாக்சி ஓட்டு நரும் விஸ்வாவும் உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த வீரர்கள் மூவரும் ஷில்லாங் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
விஸ்வாவின் மறைவுக்கு இந்திய மேைசப்பந்து கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

