சென்னை: கடந்த 11 மாத கால கட்டத்தில் மட்டும் 141 சிலைகளும் கலைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இப்போது வரை சிலைக் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 33 வழக்குகள் பதியப்பட்டு, 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் சிலை, நான்கடி உயர ரூ.5 கோடி மதிப்புள்ள சம்ஹார மூர்த்தி சிலை, ராவணன் உலோகச் சிலை, நான்கடி உயரமுள்ள சிவன் சிலை உள்ளிட்ட மீட்கப்பட்ட சிலைகளின் பட்டியலையும் காவல்துறையினர் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2020 மே மாதம் முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை 80 சிலைகள் மீட்கப்பட்டு, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாகவும் 2021 மே மாதம் முதல் இப்போது வரை 141 சிலைகள் மீட்கப்பட்டு, 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது இதற்கு முந்தைய ஆண்டைக்காட்டிலும் அதிகம் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே, மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிலைகளைக் கண்டுபிடிக்கும் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் மூன்று தனிப்படையினருக்கு தமிழக காவல்துறையின் சட்டம், ஒழுங்கு டிஜிபி சி. சைலேந்திரபாபுவும் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளியும் வெகுமதியுடன் சான்றிதழும் வழங்கிப் பாராட்டி கௌரவித்துள்ளனர்.

