சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-4-2017ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவ வழக்கு விசாரணை ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
மேற்கு மண்டல காவல்துறை ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வி.கே. சசிகலா இன்று காலை முன்னிலையாக வேண்டும் என நீலகிரி காவல்துறை ஆணை அனுப்பியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு சசிகலாவிடம் தனிப்படை காவல்துறையினர் சென்னைக்கு வந்து விசாரணை நடத்த உள்ளனர். கோடநாட்டில் இருந்த சொத்துக்கள் மற்றும் காணாமல் போன பொருட்கள் குறித்தும் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

