கோயம்புத்தூர்: தமிழக அளவில் சென்னையைக் காட்டிலும் கோவையில் அதிகளவிலான நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சில வாரங்கள் நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டமாக தமிழகத்திலேயே முதல் இடத்திலும் கோவை மாவட்டம் நீடித்தது.
தொற்று உச்சத்தில் இருந்தபோது ஒரே நாளில் அதிகபட்சமாக 47 பேர் வரை உயிரிழந்தனர். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்கள், தாதியர், பணியாளர்கள் ஆகியோர் எந்த நேரமும் பரபரப்புடன் ஓய்வின்றி உழைத்துவந்தனர். இருப்பினும் சிறப்பான சிகிச்சையை கொவிட்-19 நோயாளிகளுக்கு அளித்து வந்தனர். தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
கொரோனா வார்டில் கடந்த ஒரு வாரமாக 10க்கும் கீழ் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கொரோனா வார்டு நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

