சென்னை: சசிகலாவிடம் நடத்தப்படும் விசாரணையைத் தொடர்ந்து கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை காவல்துறையினர் 500 கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்தியதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த விசாரணையை அடுத்து தியாகராய நகரின் அபிபுல்லா சாலையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலா வீட்டில் தென்மண்டல ஐஜி தலைமையில் எட்டு காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் உடனிருந்தார்.
"ஜெயலலிதா வாழ்ந்த இடத்தில் கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்தது துரதிருஷ்டவசமானது. இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க காவல்துறையினருக்கு துணை நின்று சாட்சிகளை அளிப்பேன்," என்று சசிகலா உறுதி கூறியதாகவும் தகவல்.
கோடநாட்டில் விலை உயர்ந்த ஆபரணங்கள், ஆவணங்கள் இருந்ததா? இப்போது அவை யார் பொறுப்பில் உள்ளது? அங்கிருக்கும் பணியாளர்களை நியமித்தது? குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தேவைப்பட்டால் அதிகாரிகளுடன் நேரில் சென்று கோடநாட்டில் இருக்கும் பொருள்கள் குறித்தும் தகவல் தெரிவிக்க சசிகலா தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவரது கோடநாடு பங்களா ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
இந்நிலையில், 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த பங்களாவுக்குள் புகுந்த மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களைத் தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார்.

