சென்னை: மாமல்லபுரம் கடற்கரையில் பழங்காலத்து சிற்ப சிதறல்களும் கல்தூண்களும் ஒதுங்கி உள்ளன. அவற்றைச் சுற்றுலாப் பயணிகள் ஆவலுடன் பார்த்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், தமிழகத் தொல்லியல்துறை நிபுணர்கள் அவற்றை மீட்டு ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாமல்லபுரம் கடற்கரை கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள கடற்கரையில் ஏராளமான பழங்காலத்து கட்டடச் சிதறல்கள் ஒதுங்கின.
இதுகுறித்து தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நிபுணர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
கரை ஒதுங்கிய சிதறல்களைப் பார்க்கும்போது, அவை சுற்றுச்சுவர் எழுப்ப பயன்படுத்தப்பட்டவை என்று கணிக்க முடிகிறது என்றும் கடற்கரைக் கோவிலைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட சேதமடைந்த கட்டடம் போன்றும் தெரிவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனினும், ஆய்வுக்கு முன்பே எதையும் உறுதியாகத் தெரிவிக்க இயலாது என்றும் குறிப்பிட்டுள்ள நிபுணர்கள், கரை ஒதுங்கிய சிதறல்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேகரித்து வருகின்றனர்.
"பழங்காலத்து சிற்பச் சிதறல்கள், கல் தூண்கள், கட்டடச் சிதறல்களை முழுமையாக ஆய்வு செய்ய சில நாள்கள் ஆகும்.
"மாமல்லபுரத்தில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும் விளங்கும் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
"கடற்கரை கோவில் போன்று மேலும் ஆறு கோவில்கள் இருந்ததாகவும் அக்கோவில்கள் இயற்கைச் சீற்றத்தில் கடலில் முழ்கியதாகவும் கூறப்படுகிறது.
"இதுதொடர்பாக, தொல்லியல் துறையினர், வரலாற்று ஆய்வாளர்கள் மாமல்லபுரத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்," என்று தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.