சசிகலா: கோடநாடு பங்களாவை கோவிலாகத்தான் பார்த்தோம்
சென்னை: கோடநாடு குற்றச் சம்பவம் தொடர்பான காவல்துறையின் விசாரணைக்குத் தாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
அந்தக் குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் பணியில் இருந்த காவலாளி கொலை செய்யப்பட்டார். மேலும், அங்கிருந்த சில பொருள்களும் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுதொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அந்தக் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் சசிகலாவிடமும் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, அந்த விசாரணை தொடர்பில் அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தாம் பதில் அளித்ததாகவும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.
கோடநாடு என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் சாதாரண இடமாக இருக்கலாம் என்றும் தம்மைப் பொறுத்தவரை அது ஜெயலலிதா மிகவும் நேசித்த இடம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஜெயலலிதாவுக்கு நிறைய மன அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுத்த ஓர் இடம் உண்டு என்றால் அது கோடநாடுதான். எங்களைப் பொறுத்தவரை கோடநாடு பங்களாவை கோவிலாகத்தான் பார்த்தோம்.
"இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த அந்த இடத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்றபோது நான் சிறையில் இருந்தேன். இந்த சம்பவத்தில் எங்களிடம் நெடுங்காலமாக பணியாற்றிய காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளையும் நடந்துள்ளது," என்று சசிகலா அறிக்கையில் கூறியுள்ளார்.
கோடநாடு கொலைச் சம்பவத்தை அடுத்து சந்தேகத்துக்குஉரிய வகையில் தொடர்ச்சியாக சில மரணங்கள் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எந்த பாவமும் அறியாத சின்ன குழந்தையும் அவரது தாயும்கூட பலியாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
"எனவே, இந்த வழக்கில் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இந்த சம்பவத்தில் இன்னுயிரை இழந்த ஒன்றுமே அறியாத அப்பாவிகளான காவலாளி, பிஞ்சு மனம் மாறாத சின்ன குழந்தை, அவரது தாயார் ஆகியோர் மரணத்துக்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும்," என்று சசிகலா மேலும் வலியுறுத்தி உள்ளார்.

