'நீதிமன்றத்தில் மாநில மொழிகளைப் பயன்படுத்துவது குறித்து விரைவில் தீர்வு'
சென்னை: மொழி, அடையாளம் ஆகியவற்றால் பெருமைமிக்க தமிழர்கள், மொழிக்காக எப்போதும் முதலாவதாக வருவார்கள் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற விசாரணைகளில் மாநில மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ள போதும், தற்போதைய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடுவது குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
"ஆக்கபூர்வமான தீர்வுகள் காணும்போது நீதிபதிகள் கண்மூடி சட்டத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது. சமூக உண்மையை உணர வேண்டும். உடனடி காப்பி, உடனடி நூடுல்ஸ் போல உடனடி நீதியையும் சில தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். அது நீதியை கொன்று விடுகிறது," என்றார் தலைமை நீதிபதி ரமணா.
உச்ச நீதிமன்றக் கிளையைத் துவங்குவது குறித்து திமுக உறுப்பினர் மாநிலங்களவையில் தனிநபர் மசோதா அறிமுகம் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அதன் மீது மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது தமக்குத் தெரியாது என்றார்.
"உச்ச நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் எளிதில் அணுக ஏதுவாக காணொளி வசதி மூலம் வழக்குகளை தொடர்ந்து விசாரிப்பது என மற்ற நீதிபதிகளுடன் கலந்து பேசி முடிவெடுத்துள்ளோம்," என்றார் நீதிபதி ரமணா.
தமிழகத்தில் நீதித்துறை உள்கட்டமைப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு சிறப்பாக மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு தெரிவித்தார். மேலும், வழக்கறிஞர் நலனுக்காகவும் தமிழக அரசு பாடுபடுவதாகவும் நீதித்துறை மேம்பாட்டில் முதல்வர் ஸ்டாலின் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், தமிழ் நிலம்தான் ஏராளமான தெலுங்கு நீதிபதிகளை உருவாக்கி உள்ளது என்றார்.
"தமிழகத்தில் நீதித்துறை செயல்பாடு என்பது முன்னணியில் உள்ளது. இங்கு எண்ணிக்கை அளவில் ஏராளமான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
"குறிப்பாக கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் 90 விழுக்காடு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன," என்றார் நீதிபதி சுந்தரேஷ்.

