நாகர்கோவில்: தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி வரித்தொகையை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு முறையும் இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை மத்திய அரசு வழங்குவது இல்லை என்றும் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்தத்தில் சொல்வதானால் தமிழகத்துக்கு வந்து சேர வேண்டிய எதையுமே மத்திய அரசு அளிப்பதில்லை என்று கனிமொழி சாடினார்.
தமிழக நலனுக்கு எதிரானது என்று கருதுவதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திமுக எதிர்த்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நிலைப்பாட்டில் இதுவரை எந்த மாறுபாடும் இல்லை என்றார்.
"மூவலூர் ராமாமிர்தம் அம்மை யார் திருமண உதவித்திட்டம் இப்போது பெண்களுக்கான கல்வி உதவித்திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
"இது நிச்சயமாக பெண்களுக்கு எதிரான திட்டம் அல்ல. இது பெண்களை முன்னேற்றுவதற்கான நல்ல திட்டம்.
"உயர்கல்விக்குச் செல்லும் பெண்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
"இது பெண்களுக்கு எதிரானது என்று தவறான, பிற்போக்கான கருத்துகளை பரப்பிக்கொண்டு வருகிறார்கள்," என்று கனிமொழி மேலும் கூறினார்.

