சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் 'எக்ஸ்-இ' வகை பாதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய பாதிப்பு குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவைஇல்லை என்று அவர் கூறியுள்ளார்.
"மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரத்துறை கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனாவின் முதல் இரண்டு அலைகளின்போது ஏற்பட்ட பாதிப்புகளை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்," என்றார் அவர்.
இந்நிலையில், கிருமித்தொற்றால் லேசாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இண்டோமெதசின் மருந்து மூலம் சிகிச்சை அளிப்பது நல்ல பலனை அளித்துள்ளதாக ஐஐடி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக கடந்த மூன்று மாதங்களாக 210 கொரோனா நோயாளிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதாக அவர்கள் கூறினர். 107 நோயாளிகளுக்கு பாராசிட்டமல் மருந்து மூலமும் 103 பேருக்கு இண்டோமெதசின் மருந்து மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆய்வின் முடிவில் பாராசிட்டமல் மூலம் சிகிச்சை பெற்றவர்கள் குணமடைய ஏழு நாள்கள் தேவைப்படும் நிலையில் இண்டோமெதசின் மூலம் சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகள் குணமடைய நான்கு நாள்கள் மட்டுமே தேவைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

