பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சீர்காழியைச் சேர்ந்த முனியப்பன், கரூரில் தங்கி 'பைனான்ஸ்' தொழில் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முனியப்பன் அவரது மனைவி கலைவாணி, தாய் பழனியம்மாள், மகள் ஹரிணி, மகன் கார்முகில் ஆகிய ஐவரும் காரில் கரூரிலிருந்து சொந்த ஊரான சீர்காழிக்குச் சென்றனர்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை அருகே இவர்களது கார், முன்னாள் சென்ற ஈச்சர் வாகனத்தின் மீது மோதி நின்றது. அப்போது, பின்னால் வந்த லாரி கார் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கார் முன்னால் நின்ற ஈச்சர் வாக னம் அடியில் சிக்கிக்கொண்டது.
இவ்விபத்தில் முனியப்பன், அவரது மனைவி, தாய், மகள் என நால்வரும் பலியாகினர்.
5 வயது மகன் கார்முகில் பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் சிறுவன் கார்முகிலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மங்களமேடு காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

