மீனம்பாக்கம்: குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது புகை பிடித்து ரகளையில் ஈடுபட்ட தஞ்சாவூர் பயணி சென்னை விமான நிலைய காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார்.
குவைத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 164 பயணிகளுடன் நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தது.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, தஞ்சாவூரைச் சேர்ந்த சேவியர், 54, என்பவர் திடீரென தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து புகைத்தார்.
இதைப் பார்த்ததும் சக பயணிகள் எரிச்சல் அடைந்தனர்.சிலர் புகைக்காதீர்கள் என்றும் அறிவுறுத்தினர். இதையெல்லாம் சேவியர் பொருட்படுத்தவில்லை. விமானப் பணிப்பெண்கள் கண்டித்தும் கேட்கவில்லை.
இதையடுத்து விமான அதிகாரியிடம் பணிப்பெண்கள் இந்த விவரத்தைக் கூறினர். உடனடியாக அவர், சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக் குத் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளும் ஓடுபாதை பகுதியில் காத்திருந்தனர். விமானம் தரை இறங்கியதும் அவரைக் கைது செய்து விசாரணை செய்தனர்.

