சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில், நடை மேடையில் ஏறி விபத்துக்குள்ளான காணொளிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதில், வழக்கம்போல் பயணி கள் நடைமேடையில் நின்றுகொண்டிருந்தபோது, திடீரென நடைமேடையின் மீது ரயில் ஏறியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அங்கிருந்து பதற்றத்துடன் ஓடிச்சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து, எழும்பூர் ரயில்வே காவல்நிலையத்தில், ெசன்னை கடற்கரை ரயில் நிலையக் கண்காணிப்பாளர் துர்காராம் என்பவர் அளித்த புகாரை அடுத்து, ரயிலின் ஓட்டுநர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை ரயில்வே பாதுகாப்பு அதிகாரி பிரேம்குமார் தலைமையில் விசாரணை நடத்த ஐவர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் இயந்திர, மின்னியல் துறை அதிகாரிகளும் இடம்பெறுவார்கள் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
எப்போதும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்யும் இந்த ரயிலில் அதிர்ஷ்டவசமாக விபத்து நடந்த நேரத்தில் யாரும் பயணம் செய்யாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பராமரிப்புப் பணிகள் முடிவ டைந்து ரயில்வே பணிமனையில் இருந்து வெறும் ரயிலாக செங்கல்பட்டு செல்வதற்காக வந்துகொண் டிருந்த ரயிலில் பயணிகள் யாரு மில்லை எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்தது.
கட்டுப்பாட்டை இழந்த ரயில் தடுப்பையும் மீறி நடைமேைடயில் ஏறியபோது தீப்பொறி எழுந்ததுடன், பயங்கர சத்தம் கேட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
இந்த விபத்தினால் நடைமேடையின் மேற்கூரையும் நடைமேடையில் இருந்த குடிநீா் விற்பனைக் கடைகளும் சேதமடைந்தன.
ரயிலின் ஓட்டுநர் பவித்ரன் ரயிலில் இருந்து குதித்து உயிர் தப்பிய நிலையில், அவர் மதுபோதையில் இருந்தாரா எனவும் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த விபத்தில் ரயிலின் இயந்திரப் பெட்டியும் பயணிகள் பெட்டியும் சேதமடைந்தன. பத்து மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சேதமடைந்த ரயில் பெட்டிகள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ரயில்வே உயரதிகாரிகள் ஓட்டு நர் பவித்ரனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 'பிரேக்' பிடிக்காததால் விபத்து நிகழ்ந்ததாகக் கூறியுள்ள நிலையில், ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

