சென்னை: பலமுறை எச்சரிக்கை விடுத்தும், பேருந்துப் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை காவல்துறையினர் பிடித்து தோப்புக்கரணம் போட வைத்தனர்.
அண்மைக்காலமாக சென்னையில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி, ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வது அதிகரித்து வருகிறது.
இவ்வாறு பயணம் செய்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று காவல்துறை பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மாணவர்களின் போக்கு மாறவில்லை.
பள்ளி மாணவ, மாணவியர் இவ்வாறான ஆபத்தான செயல்களில் ஈடுபட்டால் அவர்களைப் பிடித்து வைத்து அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு, காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து, நேற்று சென்னை ஆவடிப் பகுதியில், பேருந்துப் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற மாணவர்களைப் பிடித்து போலிசார் தோப்புக்கரணம் போட வைத்தனர். மேலும், இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று அறிவுரையும் கூறினர்.

