சென்னை: தமிழகத்திலிருந்து இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசின் அனுமதி கோரி சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் முன்மொழிந்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "இலங்கைக்கு உதவ, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதி கேட்டும் இதுவரை பதில் வரவில்லை.
"இலங்கையில் உள்ள தமிழர்
களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட தமிழக அரசு தயாராக உள்ளது. அங்கு மண்ணெண்ணெய் வாங்க மக்கள் பல மணி நேரம் காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. 15 கோடி 500 டன் பால்மாவு, 80 கோடி ரூபாயில் 40,000 டன் அரிசி, 28 கோடி ரூபாயில் 137 வகையான மருந்துப் பொருள்கள் ஆகியவற்றை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு தயாராக இருக்கிறது.
"இதற்கு உரிய அனுமதியை வழங்கவேண்டும் என்று கேட்டு மத்திய அரசிற்கு ஏற்கெனவே தமிழக அரசு கடிதம் எழுதியிருக்கிறது.
"இந்தக் கோரிக்கையை ஏற்று, கடும் இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கிற இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை உடனடியாக அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.
"மனிதாபிமான அடிப்படையில் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.
இந்தத் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் தீர்மானத்தை ஆதரித்தனர்.
இலங்கை மக்களுக்கு உதவி: மத்திய அரசிடம் அனுமதி கோரும் தீர்மானம் நிறைவேறியது

