பெங்களூரு: தாய்மொழியான தமிழில் படித்ததால்தான் தன்னால் அறிவியலில் சாதனை படைக்க முடிந்தது என்று விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
பெங்களூருவில் 'தமிழைக் கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தாய்மொழியில் தாம் கல்வி கற்றதை பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
இயல், இசை, நாடகத்தை அடுத்து அறிவியலில் தமிழ் வேகமாக வளர்ந்து வருவதாகத் தெரிவித்த மயில்சாமி அண்ணாதுரை, தாய்மொழியில் சிந்திக்கும் குழந்தைகளின் திறன் மேம்பட்டதாக இருக்கும் என்றார்.
தமிழில் படித்தவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்றும் தாய்மொழியில் படிக்கும்போது சுயமாக சிந்திக்க முடிகிறது என்றும் அவர் கூறினார்.
"நிலவுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலம் அனுப்ப பல நாடுகள் முயற்சி செய்தன. அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
"ஆனால் நிலவுக்கு 'சந்திரயான்' செயற்கைக்கோளை முதல் முயற்சியிலேயே அனுப்பி வெற்றி பெற்றோம். தமிழர்களுக்கு இயல்பாகவே அறிவாற்றல் அதிகம். தாய்மொழியில் படிக்கும்போது சுயமாக சிந்திக்க முடிகிறது. அந்த சுயசிந்தனை தான் கூர்மையான அறிவுக்கு அடித்தளமாக அமைகிறது," என்றார் மயில்சாமி அண்ணாதுரை.

