சென்னை: தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கும் முதல்வர் கடிதம் எழுதிஉள்ளார்.
"உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும்.
"நீதிபதிகளை நியமிப்பதில் சமூகப் பன்முகத்தன்மை, சமூக நீதியைப் பேணும் வகையில் மாற்றம் தேவை," என முதல்வர் தமது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
மேலும், நீதித்துறையில் கூட்டாட்சித்தன்மை பிரதிபலிக்கப்பட உச்ச நீதிமன்ற நிரந்தரக் கிளைகளை நிறுவ வேண்டும் என்றும் சென்னை, கோல்கத்தா, மும்பை, டெல்லியில் உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை அமைக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, உள்ளூர் மொழிகளை நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக பயன்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

