சென்னை: இலங்கையில் பதற்றம் நிலவி வருவதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ள மகிந்த ராஜபக்சேவும் அவரது குடும்பத்தாரும் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மகிந்த ராஜபக்சேவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
போர்க்குற்றங்கள், இனப்படுகொலை ஆதாரங்களின் அடிப்படையில் ராஜபக்சே சகோதரர்களைக் கைது செய்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்றுத்தர வேண்டும் என பாமக இளையரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும் பிற உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
"2009ஆம் ஆண்டு ஈழப் போரில் லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்தவர்கள் ராஜபக்சே சகோதரர்கள்தான். அவர்களின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ஐநா மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ளது.
"அப்படிப்பட்ட போர்க்குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக்கூடாது," என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் அடைக்கலம் அளிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, அதற்காகப் போராடிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகச் சாடியுள்ளார்.
"இரண்டு லட்சம் தமிழர்களைத் துள்ளத் துடிக்கப் படுகொலை செய்த அக்கொடுங்கோலர்களுக்கு மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு எக்காரணம் கொண்டும் இந்தியாவின் எந்த மூலையிலும் அரசியல் அடைக்கலம் அளிக்க முன்வரக்கூடாது.
"அதுமட்டுமின்றி, இந்தியாமூலமாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லவும் அனுமதிக்கக் கூடாது," என்று சீமான் கூறி உள்ளார்.