பொன்முடி: இந்தி படித்தவர்கள் பானிபூரி விற்றுக்கொண்டிருக்கிறார்கள்
சென்னை: "முன்பு இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றனர். அப்படியானால் கோவையில் பானி பூரி விற்பவர்கள் யார்?" என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டனர். அப்போது இந்தி மொழித் திணிப்பு தொடர்பாக இருவரும் காரசாரமாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி, ஒருவர் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம் என்றார்.
இந்தி மொழித் திணிப்பை மட்டுமே திமுக எதிர்க்கிறது என்றும் தமிழக அரசு எந்த மொழிக்கும் எதிரானது அல்ல என்றும் அமைச்சர் பொன்முடி தெளிவுபடுத்தினார்.
"மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களைப் பின்பற்ற நாங்கள் தயார். தமிழ்நாடு கல்விக் கொள்கையை நிறுவ முதல்வர் ஒரு குழு அமைத்துள்ளார். தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளை ஆளுநர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.
"இந்தியை கட்டாயமாக்கக்கூடாது என்பதை மட்டுமே வலியுறுத்துகிறோம். மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம்," என்றார் அமைச்சர் பொன்முடி.
இதையடுத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசு இந்தி மொழியைத் திணிக்கவில்லை என்றார். எல்லா மொழிகளும் வளர ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகிறது. மாநில மொழிகளிலேயே பாடங்கள் நடத்தப்படுகின்றன.
"தமிழ், சிறப்பான உயர்ந்த மொழி. அந்தந்த மாநில மொழிகளில்தான் நீதிமன்ற வழக்காடுதல் நடைபெற வேண்டும் என பிரதமர் மோடியும்கூட அண்மையில் நீதிபதிகள் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் பேசி இருக்கின்றார். ஆகவே இந்தி மொழி திணிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை. இந்தியாவில் எல்லா மொழிகளும் வளர ஊக்கவிக்கப்படும்," என்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
புதிய கல்விக் கொள்கையால் தமிழ்மொழி பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக கற்பிக்க வாய்ப்பு எற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பிற நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைத்து இருப்பதை போல, இந்தியாவிலும் பிற பல்கலைக்கழகங்களில் இருக்கை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தி மொழி திணிப்பு குறித்த ஆளுநர், அமைச்சரின் பேச்சால் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பு நிலவுகிறது.

