சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று முப்பது ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தாம் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தம்மை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.
எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம் என்று கருதப்படும் நிலையில், பேரறிவாளன் தரப்பும் மத்திய அரசும் எழுத்துபூர்வ வாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் அதிபர் தான் முடிவெடுக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியுள்ளது என்றும் இதைத்தவிர வேறு எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசு தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளது.
"பேரறிவாளன் விவகாரத்தில் குற்றத்தின் தீவிர தன்மை, ஆதாரங்கள் உள்ளிட்ட எதையுமே கருத்தில் கொள்ளாமல் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.
"எனவேதான், ஆளுநர் இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க அதிபருக்குப் பரிந்துரை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்தது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு என்பதால் இதில் மாநில அரசு முடிவெடுக்க முடியாது. எனவே, பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
கருணை மனுவை ஒவ்வொரு முறையும் அதிபருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்றால், மாநில ஆளுநர்கள் இதுவரை கருணை மனுக்கள் மீது எடுத்துள்ள முடிவுகள் அரசியலமைப்புச் சாசனத்திற்கு முரணாகவும் செல்லாமலும் போகும் என பேரறிவாளன் தரப்பு தெரிவித்துள்ளது.
"அமைச்சரவையின் ஆலோசனையின் படியே ஆளுநர் செயலாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி கருணை மனு மீதான முடிவையும் அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஆளுநர் எடுக்க வேண்டும்," என பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துபூர்வ வாதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

