புதுடெல்லி: டெல்லியில் நான்கு மாடி வணிக வளாகக் கட்டடத்தில் மூண்ட தீயில் கருகி 27 பேர் உயி ரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இப்போது பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளியன்று மாலை இச்சம்வம் நடந்தது முதல், தலைமறைவாகி விட்ட வணிக வளாகக் கட்டடத்தின் உரிமையாளர் மணிஷ் லக்ராவை டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
வணிக வளாகத்தை பாதுகாப்பு இல்லாத வகையில் கட்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தீவிபத்தின் போது, தங்களது உயிரை துச்சமாக மதித்து பலரது உயிரைக் காப்பாற்றியுள்ள மூவரை 'உண்மையான நாயகன்கள்' என வர்ணித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
வணிக வளாகத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த மம்தா தேவி, 52, என்பவர் தீ விபத்து பற்றி கூறியபோது, "தீ விபத்து ஏற்பட்டவுடன் ஒரே கூச்சலாக இருந்தது. மக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தப்பியோடினர். அறையின் வெப்பநிலை திடீரென உயர்ந்த நிலையில், பலரும் மயங்கி விழுந்தனர்.
"சற்று நேரத்தில், பாரந்தூக்கியில் மீட்புக் குழுவினர் வந்தனர். சன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்தன. என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு முன்பு அங்கிருந்த சிறுமிகளின் உயிரைக் காப்பாற்ற நினைத்தேன். அவர்களை முதலில் கயிறு வழியே கீழே இறக்கிவிட்டேன். வேறு யாரும் அங்கில்லை என்பதை உறுதி செய்தபின்னரே கடைசியாக நான் கீழே இறங்கிேனன்," என்றார்.
இதுபோன்று ஆறு சிறுமிகளை அவர் காப்பாற்றி உள்ளார்.
இதேபோன்று அதே தொழிற் சாலையில் கடந்த ஓராண்டாகப் பணியாற்றி வரும் அவினாஷ், 27, கூறும்போது, "சன்னலை உடைத்து பெண்கள், குழந்தைகளைப் பாரந்தூக்கி வழியே கீழே கொண்டு செல்ல உதவினேன். திடீரென அறையின் வெப்பநிலை அதிகரித்து, புகை பரவத் தொடங்கியது. அதன்பின்னர் மேசை, நாற்காலிகள் உதவியுடன் சன்னலை உடைத்தோம். எங்களை முதலில் போகவிடுங்கள், வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். எங்களது வீட்டில் வேலை பார்க்கும் ஒரே நபர் தாங்கள்தான் என்று சில பெண்கள் கூறினர். இதுபோன்ற சூழலில், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் முதலில் காப்பாற்ற வேண்டும் என நினைத்து அதற்கேற்ப செயல்பட்டேன்," என்றார்.
அறையில் வெப்பம் அதிகரித்து சிலர் உயிரிழந்து கிடந்தனர். அவர்களுடன் வேறு சிலரும் மயங்கி விழுந்தனர். அவர்களை வினீத் குமார் என்பவர் காப்பாற்றி உள்ளார்.
வினீத் கூறும்போது, "எரிந்து கொண்டிருந்த கட்டடத்தில் நடந்த காட்சிகளைப் பார்க்கும்போது மனது வலித்தது. பலர் சுயநினைவற்று தரையில் கிடந்தனர். சிலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மாடிப்படிகளில் ஏறி ஓடினர்.
"சுயநினைவற்று, மயங்கிக் கிடந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. இதனால், மற்றவர்களின் உதவியுடன் 12க்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றினேன்," என்றார் வினீத்.
"அந்தப் பகுதியில் இருந்து உடனே தப்பி ஓடிவிட நினைத்தேன். ஆனால், தீயின் பிடியில் சிக்கிக்கொண்டு அலறிய மக்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல மனமில்லை. நிலக்கரி அடுப்பின் மீது நிற்பதுபோல் உணர்ந்தேன்," என வினீத் கூறியுள்ளார்.
தங்களது உறவினர்களை கண் ணீருடன் இன்னும் தேடி அலைந்து வருகின்றனர் குடும்பத்தினர்.

