பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது
சென்னை: தமிழகத்தில் சுமார் இருபது விழுக்காட்டினருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் மூலம் தமிழக முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள்தான் அதிகம் பயன்படுத்தி உள்ளனர். அவர்களில் ஏராளமானோர் ரத்த சுத்திகரிப்புக்காக (டயாலிசிஸ்) விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மொத்தம் 4,741 பேரிடம் இருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் 455 பேருக்கு, அதாவது 9.5 விழுக்காட்டினருக்கு ரத்தத்தில் 'க்ரியாடினின்' அளவு அதிகம் இருந்தது. இதேபோல் 276 பேருக்கு, அதாவது 5.8 விழுக்காட்டினருக்கு ஆல்புமின் அளவு அதிகமாக இருப்பதும் 367 பேருக்கு, அதாவது 7.7 விழுக்காட்டினருக்கு சிறுநீரில் ரத்தம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
"ஆய்வின்போது மொத்தம் 934 பேருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது தெரியவந்துள்ளது. இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 19.7 விழுக்காடு ஆகும். இதன் வழி சிறுநீரக கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது," என பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது தொற்றா நோய்களில், சிறுநீரகக் கோளாறுகள் காரணமாகத்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டி உள்ள அந்த இயக்குநரகம், தமிழகத்தில் சிறுநீரக கோளாறுகள் எந்த அளவில் என்பது தொடர்பாக முழுமையான தரவுகள் அரசிடம் இல்லை எனக் கூறியுள்ளது.
"அண்மைய ஆய்வில் பங்கேற்றவர்களில் சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் தனியே தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை நடத்தப்படும். அப்போது கோளாறுகள் நீடிப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறு கொண்டவர்களாக கருதப்படுவார்கள்," என பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மாநிலம் முழுவதும் 177 பகுதிகளில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் 92 ஆய்வுக் குழுக்கள் சிறுநீரகக் கோளாறுகள் குறித்த இந்த ஆய்வை மேற்கொண்டதாக அந்த இயக்குநரகம் கூறியுள்ளது.

