தர்மபுரி: தேரோட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாட்ஸ்அப் மூலம் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தேர்த் திருவிழாவை நடத்த வேண்டியது அரசின் கடமை என்று நீதிபதி கூறினார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வரதராஜ சுவாமி கோவில் தேர்த் திருவிழாவை நடத்த அண்மையில் தடை விதிக்கப்பட்டது. அங்கு தேர் வலம் வரும் சாலைகளை தமிழக அறநிலையத்துறை ஆய்வாளர் நேரில் பார்வையிட்டார். அப்போது தேரோடும் பாதை குறுகலாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அங்குள்ள மின் கம்பங்கள் சாலையின் உள்பக்கமாக அமைந்துள்ளது ஆபத்தானது என்றும் அவர் கூறினார். தவிர, மின்கம்பிகள் தேரின் உயரத்தைவிட தாழ்வாக உள்ளதையும் கவனித்த ஆய்வாளர், தேர்த் திருவிழாவை நடத்த அனுமதிக்க இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தேர்த் திருவிழாவை நிறுத்துவதற்கான உத்தரவு கடந்த 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த கோவிலின் பரம்பரை அறங்காவலர் சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். அவர் தாக்கல் செய்த அவசர மனுவில், கடந்த 80 ஆண்டுகளாக தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது என்றும் தேர் வலம் பாதையில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசுத் தரப்பில் பல்வேறு துறைகளிடம் இருந்து தேரோட்டத்துக்கான உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளதாகவும் சீனிவாசன் தமது மனுவில் தெரிவித்து இருந்தார். அண்மையில் தஞ்சையில் தேரோட்டத்தின்போது நிகழ்ந்த விபத்தை அடுத்து வரதராஜ சுவாமி கோவில் தேரோட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. அசம்பா விதங்களைத் தவிர்க்கவே திருவிழாவை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளதாக அரசுத் தரப்பு வாதிட்டது.
வாட்ஸ்அப் மூலம் இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி, தேரோட்டத்தை நிறுத்தும்படி உத்தரவிட அறநிலையத் துறை ஆய்வாளருக்கு அதிகாரம் இல்லை என்றார்.
மேலும், தேர்த் திருவிழாவை சுமுகமாகவும் பாதுகாப்புடனும் நடத்த வேண்டும் என்று தமது உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதி, தேரோட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அறநிலையத்துறை யின் கடமை என்றார்.