சென்னை: கல்லூரி மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதால் சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி பகுதியில் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக காவல்துறை ஐந்து மாணவர்களைத் தடுத்து வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோதலுக்கு 'ரூட் தல' விவகாரம்தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
பேருந்து அல்லது ரயில் மூலம் குறிப்பிட்ட வழித்தடத்தில் தினமும் கல்லூரிக்குப் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களில் ஒருவர் தமக்குத் தலைமைப் பண்பு இருப்பதாகக் கூறிக்கொண்டு, தன்னைத் தானே அவர்களின் தலைவனாக அறிவித்துக்கொள்வார். இதை ஏற்றுக்கொள்ளும் மாணவர்கள் அவரை 'ரூட் தல' எனக் குறிப்பிடுகிறார்கள். அதாவது அக்குறிப்பிட்ட வழித்தடத்துக்கு மட்டும் அவர் தலைவர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் 'ரூட் தல' பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
நேற்று முன்தினம் திருத்தணி, பூந்தமல்லி செல்லும் பேருந்து வழித்தடத்துக்கு யார் தலைவர் என்பது தொடர்பாக அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து வாக்கு
வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதம் முற்றியதில் கை
கலப்பு ஏற்பட்டது.
அப்போது மாணவர்களில் சிலர் போக்குவரத்து பரபரப்பாக உள்ள சாலையில் மோதிக்கொண்ட தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.
மேலும், அந்தக் கல்லூரியின் நுழைவு வாயிலில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
கல்லூரியின் பின்புறம் உள்ள மற்றொரு நுழைவுவாயிலுக்கு மின்சாரக் கம்பத்தின் கீழ் இரண்டு பைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த காவல்
துறையினர், அவற்றுள் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் காலி மதுப்புட்டிகளும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, நேற்று முன்
தினம் மதியம் கல்லூரி வளாகத்துக்குள்ளும் மாணவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். அப்போது சில மாணவர்கள் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்ட பைகளை எடுக்க ஓடிவந்தனர். அவர்களைக் காவலர்கள் மடக்கிப்பிடித்ததால் கல்லூரிக்குள் ஆயுதங்களைக் கொண்டு செல்ல முடியவில்லை.
இதனால் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை என்று குறிப்பிட்ட காவல்துறையினர், பிடிபட்ட மாணவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டனர்.

