சென்னை: தமக்கு எந்தவித நோயும் இல்லை என்றும் தமது உடல்நிலை குறித்து சீடர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து தாம் சமாதி நிலையில் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்கள் வழி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமது உடல் பாகங்கள் அனைத்தும் சரியாக வேலை செய்வதாக நேற்று முன்தினம் அவர் மேலும் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"எனக்கு புற்றுநோய் அல்லது கட்டி எதுவும் இல்லை, இதயப் பிரச்சினை எதுவும் இல்லை. கொழுப்பு, கல்லீரல் பிரச்சினை, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைத்து உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்கின்றன," என்று தமது பதிவில் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
27 மருத்துவர்கள் தமக்கு சிகிச்சை அளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அலோபதி மருத்துவ முறையின் மூலம் தமக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
"ஒரே விஷயம், என்னால் உணவு உட்கொள்ள முடியவில்லை. நான் எந்த உணவையும் வாயில் தள்ள முயன்றால் சில நிமிடங்களில் வாந்தி எடுக்கும் நிலை உள்ளது. மேலும் எனக்கு உறக்கமும் வரவில்லை. உடலில் எந்த இயக்கமும் தன்னிச்சையாக நடக்கவில்லை.
"என்னைக் கவனித்துக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், சீடர்கள் என்னை கீழே படுக்க வைத்து நன்றாக மூச்சு விடும்படி வற்புறுத்துகிறார்கள். ஆறு மாதங்களுக்கு மேலாக உணவு மற்றும் உறக்கம் இல்லாமல் இவ்வாறு நிர்விகல்ப சமாதியில் இருப்பது எனக்கு வழக்கமானதுதான். எனவே சீடர்கள் என் உடல்நிலை பற்றி கவலைபடத் தேவையில்லை," என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா கைலாசா என்ற தீவை விலைக்கு வாங்கி அங்கு வசித்து வருவதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சிறிய விமான நிலையம் உள்ளது. தமது மருத்துவ பராமரிப்பிற்காகவோ அல்லது தேவைப்படும் மருத்துவ இயந்திரங்களுக்காகவோ யாரும் பணம் அனுப்பத் தேவை இல்லை என்றும் தம் உடல்நலனைக் கவனித்து கொள்வதற்கு ஏற்கெனவே சீடர்கள் போதுமானதைவிட அதிகமாக வழங்கி உள்ளதாகவும் நித்யானந்தா கூறியுள்ளார்.
"எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை. இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வெறுப்பும் இல்லை," என்று நித்யானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

