சென்னை: தலைக்கவசம் அணியாததால் உயிரிழப்போர் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 98 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஜனவரி 1ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களில் சென்ற 841 பேர் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளனர்.
இவர்களில் தலைக்கவசம் அணியாத 80 வாகனமோட்டிகளும் வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த 18 பேரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்களில் 714 பேர் வாகனமோட்டிகள் என்றும் 127 பேர் பின்னிருக்கையில் அமர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் நிகழ்ந்த விபத்துகளில், சென்னையில் மட்டும் தலைக்கவசம் அணியாமல் சென்ற 611 பேர் மாண்டுவிட்டனர். 3,294 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 477 பேர் இருசக்கர வாகனமோட்டிகள் என்றும் 134 பேர் வாகன பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 2,929 பேர் வாகனமோட்டிகள் என்றும் 365 பேர் பின்னிருக்கையில் பயணித்தவர்கள் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் பதிவாகி வரும் நிலையில், இருசக்கர வாகனமோட்டிகள் மட்டுமல்லாமல், உடன் செல்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
இல்லையெனில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

