சென்னை: தமிழகத்தில் மின்விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு உதவியுடன் ரூ.10,790 கோடியில் மின்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
நாடு முழுவதும் மின்சாரம் சீரான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய, மின்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி ரூ.3.03 லட்சம் கோடி செலவில் நிறைவேறுகிறது. இதற்காக தமிழகத்துக்கு ரூ.10,790 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில், ரூ.8,600 கோடி மத்திய அரசு சார்பில் கடனாக வழங்கப்படும் என்றும் இந்தப் பணிகளை ஐந்து ஆண்டுகளுக்குள் முடித்துவிட்டால் மத்திய அரசு வழங்கும் கடன் தொகையில் 60 விழுக்காடு மானியமாகக் கருதப்படும் என்றும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருவதால் மின்நுகர்வு குறைந்துள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் ஆறு நாள்களுக்கு நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக கரூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார். இனிவரும் காலங்களில் மின் உற்பத்தி வீணாவதை தடுத்து உபரி மின்சாரத்தைப் பிற மாநிலங்களுக்கு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் மின் உற்பத்தி 50 விழுக்காடு அதிகரிக்கும் என்றார்.

