சென்னை: 'ஜெய்பீம்' திரைப்படம் குறிப்பிட்ட ஓர் பிரிவினரின் மத உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அப்படத்தின் நாயகன் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் உள்நோக்கத்துடன் சித்திரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீருத்ர வன்னியர் சேவா என்ற அமைப்பைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் காவல்துறையில் அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான 'ஜெய்பீம்' திரைப்படம் சில சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. அந்தப் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் வன்னிய சமுதாய மக்களை அவமதிப்பதாக உள்ளது என்று புகார் எழுந்தது.
இதுகுறித்து வருத்தம் தெரிவித்த படத்தரப்பு, அக்குறிப்பிட்ட காட்சிகளை நீக்கியது. இயக்குநர் ஞானவேல் மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்நிலையில், ருத்ர வன்னியர் சேனா என்ற அமைப்பின் தலைவர் சந்தோஷ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மேலும், 'ஜெய்பீம்' படத்தில் சாதி, மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் சில காட்சிகள் உள்ளதாகவும் இது தொடர்பாக சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதை விசாரித்த நீதிமன்றம், சூர்யா, ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்து, அது தொடர்பான விவரங்களை மே 30ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

