சென்னை: தமிழக அரசு செயல்படுத்தி வரும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,368 கோடி ரூபாய் வீணாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் வழக்கத்தைவிட, பல நூறு கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த தரவுகள் என்ற அமைப்பின் நிறுவனரான ஆனந்தராஜ் என்பவர் வலியுறுத்தி உள்ளார். அவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பல்வேறு முக்கிய தகவல்களை திரட்டியுள்ளார். அவற்றின் அடிப்படையில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் நவீன, மேம்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை கிடைத்து வருகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகள் மூலம் கட்டணமின்றி இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்காக காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளிடம் மாநில அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் கடந்த 13 ஆண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுக்காக எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது, அந்தத் தொகை எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது குறித்து ஆனந்தராஜ் விவரங்கள் சேகரித்துள்ளார்.
அதன்படி, 13 ஆண்டுகளில் காப்பீட்டுத் திட்டத்துக்காக தமிழக அரசு செலுத்திய தொகை ரூ.10,706 கோடி. அதில் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.5,736 கோடியும் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.2,602 கோடியும் அளிக்ககப்பட்டுள்ளது. ரூ.8,338 கோடி இவ்வாறு செலவிடப்பட்ட நிலையில், மீதம் உள்ள ரூ.2,368 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வருமானமாக சென்று சேர்ந்துள்ளது என்கிறார் ஆனந்தராஜ்.
மேலும், காப்பீட்டுக்காக செலுத்தப்படும் பிரிமியம் தொகையில் குளறுபடிகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
2017 வரை ரூ.928 கோடி பிரிமி யம் தொகையாகச் செலுத்தப்பட்டு வந்தது என்றும் அதில் ரூ.850 கோடி பயன்படுத்தப்பட்டு சுமார் 5 முதல் 10 விழுக்காடு வரை காப்பீட்டு நிறுவனத்துக்கு வருமானமாக சென்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனனும் 2018ஆம் ஆண்டு இந்தப் பிரிமியம் தொகையானது ஒரேயடியாக ரூ.1,773 கோடியாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டைவிட 845 கோடி ரூபாய் அதிகம் என்பதுடன் சுமார் 900 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களுக்கு லாபமாகச் சென்று சேர்ந்துள்ளது.
கடந்த 13 ஆண்டுகளில் அரசு காப்பீட்டுத் திட்டத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கியதற்காக பயன்படுத்தியதுபோக தனியார் மருத்துவமனைகளுக்கு சுமார் 3,000 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தத் தொகையைப் பயன்படுத்தி, தமிழக அரசே எய்ம்ஸ் மருத்துவமனை தரத்தில் இரண்டு புதிய மருத்துவமனைகளை நிறுவியிருக்க முடியும் அல்லது மாவட்டம்தோறும் ஒரு பன்னோக்கு மருத்துவமனையை கட்டியிருக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

