சென்னை: மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது என்றும் அவர் இரக்கமுள்ள, கனிவான மனிதராக திகழ்ந்தார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார் என்றும் பிறரை மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் தன் தந்தை என்றும் அவர் புகழாரம் சூட்டிஉள்ளார்.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா, பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, தமக்கும் தனது சகோதரி பிரியங்காவுக்கும் ராஜீவ் காந்தி அற்புதமான தந்தையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
"எங்களுக்கு மன்னிப்பு, பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தவர் என் தந்தை. நான் அவரை இழந்து தவிக்கிறேன், நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்," என்று ராகுல் காந்தி தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளன், தாம் சிறைப் பள்ளிக்கூடத்தில் படித்ததாகவும் பிறகு சிறைவாசிகளுக்கு வகுப்புகள் நடத்தி கற்பித்துக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
"19 வயதில் சிறைக்குச் சென்ற நான், 31 ஆண்டுகள் கழித்து தற்போது வெளி உலகை காண்கிறேன். இது புது உலகமாகத் தெரிகிறது. நான் சட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன்," என்று பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.

