மதுவிருந்தில் இளையர் பலி
சென்னை: கோயம்பேடு வி.ஆர். மாலில் அனுமதியின்றி மதுவிருந்து நடத்தியது தொடர்பாக மதுபானக்கூட மேலாளர்கள் நிகாஷ், பாரதி, ஊழியர் எட்வின் ஆகியோரை காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுவிருந்தில் பங்கேற்ற இளைஞர் பிரவின் மயங்கி விழுந்து உயிரிழந்ததை அடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.
10 ரூபாய்க்கு மஞ்சள்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம்
சென்னை: தமிழகம் முழுவதும் தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சள் பை விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு ெதரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் பை தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.
10 ரூபாய் பணத்தைச் செலுத்தினால் இயந்திரத்தில் இருந்து மஞ்சள் துணிப்பை வெளியே வரும் என்று சுற்றுச்சூழல், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கூறியுள்ளார்.
தந்தை-மகனுக்கு 14 நாள்கள் சிறை
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் விபத்து நடந்து ஒருவாரமாகியும் அதில் சிக்கிய ஆறாவது நபரை மீட்கமுடியாமல் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் திணறி வருகின்றனர். விபத்தில் மூவர் உயிரிழந்தனர். இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதனிடையே, குவாரி உரிமையாளரும் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவருமான சேம்பர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை மங்களூருவில் நேற்று முன்தினம் கைது செய்து, நெல்லை நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தினர். இருவரையும் 14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி திருவேணி உத்தரவிட்டார். இதையடுத்து, இவர்கள் திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாகனத்தில் பின்புறம் அமர்பவர்க்கும் தலைக்கவசம் கட்டாயம்
சென்னை: இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று சென்னை போலிஸ் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இது இன்று 23ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தலைக்கவசம் அணியாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஜனவரி முதல் மே 15 வரையிலான நான்கரை மாதத்தில் இரு சக்கர வாகன விபத்தில் 98 பேர் பலியாகி உள்ளனர். இதில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 80 பேரும் பின்புறம் அமர்ந்து பயணம் செய்தவர்கள் 18 பேரும் அடங்குவர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம்: நான்காம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்தவர்களுக்கான 4ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்புக்காக 2,500 காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். முன்னெச்சரிக்கையாக வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு தூத்துக்குடிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
எண்ணெய் ஆலையில் தீவிபத்து
விருதுநகர்: விருதுநகரில் எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தன.
பாண்டியன் நகரில் அப்பண்ண சாமி என்பவருக்குச் சொந்தமான அந்த ஆலையில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வந்தன.
வழக்கம்போல சனிக்கிழமை இரவு ஆலை மூடப்பட்ட நிலையில், திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ஆலையில் இருந்த இயந்திரங்கள், எண்ணெய் ஆகியவை சேதம் அடைந்தன. கொழுந்துவிட்டு எரிந்த தீ இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சிலைகளைக் கடத்திய ஐவர் கைது
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டியில் நடந்த வாகனச் சோதனையின்போது, உலோகச் சிலைகளைக் கடத்திச் சென்ற ஐவர் பிடிபட்டனர். கேரள
மாநிலத்தைச் சேர்ந்த சசிராம், இஸ்மாயில், முகமது, ரஷீத், ஜாகித் ஆகிய ஐவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

