சென்னை: தமிழகத்தின் மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி 10,540 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்று கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். மின்சாரம், மின் விநியோகம் குறித்து அளிக்கப்படும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
"பொதுமக்கள் தயக்கம் இன்றி புகார் தெரிவிக்க ஏதுவாக மின்னகம் உருவாக்கப்பட்டது. அதன் பலனாக, கடந்த 11 மாதங்களில் மட்டும் சுமார் 800,000 புகார்கள் வந்துள்ளன. இதில் 99 விழுக்காடு புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது," என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
தமிழகத்தில் 3.24 கோடி மின் இணைப்புகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், உற்பத்திச் செலவை ஒப்பிட்டு அனல் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழக மின் தேவைக்காக ஒப்பந்தங்கள் போடப்பட்டு மின்சாரம் வாங்கப்படுவதாகவும் உபரியாக உள்ள மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு பரிமாற்ற முறையில் வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
"தமிழக மின் நுகர்வு சராசரியாக 14,500 மெகாவாட் முதல் 17,500 மெகாவாட் வரை உள்ளது. இதன் சராசரி கணக்கிடப்பட்டு தமிழக மின் உற்பத்தி 4,320 மெகாவாட் என்பது 25 விழுக்காடு எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

