செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் விரைவில் செயல்படத் தொடங்கும்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பூசி மையத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கப்படும் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுமார் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மத்திய அரசின் தடுப்பூசி மையம் உற்பத்திக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதாக இந்திய மருந்து விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் பேசும்போது அவர் குறிப்பிட்டார். எலிக்காய்ச்சல், தக்காளி காய்ச்சல், குரங்கம்மை குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கூட்டணியால் தமிழக காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது என்கிறார் அழகிரி
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணிகள் கட்சியைப் பலவீனப்படுத்திவிட்டது என்பதே உண்மை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கூட்டணி அரசியல் காங்கிரசின் வளர்ச்சியைக் குறைத்து பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். "ஒரு கூட்டணி வலுவாக இருந்தால், அது கட்சியையும் வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். இதைச் சொல்வது, செயல்படுத்துவது கடினம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க மிகப்பெரிய தியாகம் செய்ய வேண்டும். சில தேர்தல்களில் நாம் தோற்க நேரிடலாம். தனித்தன்மையுடன் வலிமையாக இருந்தால் மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள்," என்று கே.எஸ்.அழகிரி மேலும் கூறியுள்ளார்.
இலங்கை மக்களுக்காக மொய் விருந்து மூலம் நிதி திரட்டிய தேநீர்க் கடைக்காரர்
புதுக்கோட்டை: இலங்கை மக்களுக்காக தனது தேநீர்க் கடையில் மொய் விருந்து நடத்தி ரூ.16,000 நிதி திரட்டியுள்ளார் சிவக் குமார் (படம்). 46 வயதான இவர், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் தேநீர்க் கடை நடத்தி வரு கிறார். இதற்கு முன்பு கஜா புயலால் பெரும் சேதங்களை தமிழகம் சந்தித்தபோது தனது கடையில் தேநீர், பலகாரங்களுக்காக வாடிக்கையாளர்கள் பாக்கி வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாயைத் தள்ளுபடி செய்தார் சிவக்குமார். அதேபோல் கொரோனா காலகட்டத்தில் தனது கடையில் தேநீர், பலகாரங்களை இலவசமாக வழங்கி, விருப்பப்பட்டவர்கள் அளித்த தொகை மூலம் 20 ஆயிரம் ரூபாய் திரட்டி தமிழக அரசுக்கு அளித்தார். இந்நிலையில், இலங்கை மக்களுக்காகவும் உதவிக்கரம் நீட்டியுள்ளார் சிவக்குமார். இம்முறை 16 ஆயிரம் ரூபாய் திரட்டியுள்ளார்.
சிவகங்கை, திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு
சிவகங்கை: சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் நேற்று முன் தினம் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்தேறியது. திருப்பத்தூரில் உள்ள பூலாங்குறிச்சியில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஜல்லிக்கட்டு நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், நத்தம், அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. இதேபோல், திருவெறும்பூரில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் 21 பேருக்கு காயம் ஏற்பட்டது.
ரூ.1,500 கோடி செலவில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்
சென்னை: 1,500 கோடி ரூபாய் செலவில் சென்னை மாநகராட்சி ப்பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளன. சென்னை மாநகராட்சி யின் 13 மேல்நிலை, ஐந்து உயர் நிலை, ஒரு நடுநிலை, 10 தொடக்கப் பள்ளி என மொத்தம் 28 பள்ளிகளில் பிரான்ஸ் பன்னாட்டு முகமை நிதியுதவியுடன் அதற்கான திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினால் 20,000 மாணவர்கள் பயன்பெறுவர்.
ராமேசுவரம்: கடந்த 58 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தனுஷ்கோடி தரைப்பாலம் வெளியே தெரிந்தது. இதையடுத்து, அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் அங்கு புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதுடன், தரைப்பாலம் தெரிவதைக் காணொளியாகவும் பதிவு செய்கின்றனர்.
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி, கடந்த 1964ஆம் ஆண்டு வரை பரபரப்பான தொழில் நகரமாக விளங்கி வந்தது.
இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கு தனுஷ்கோடியில் இருந்து போக்குவரத்துக் கப்பல்களும் ரயில்களும் இயக்கப்பட்டன. வளர்ந்த நகருக்குரிய வகையில் மருத்துவமனை, துறைமுகம், தபால் நிலையம், கோவில்கள், பள்ளிகள் என அனைத்து வசதிகளும் தனுஷ்கோடியில் இருந்தன.
இந்நிலையில், 1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி வீசிய புயலில் ஒட்டுமொத்த தனுஷ்கோடி நகரமும் அழிந்துபோனது. புயலுக்குப் பின்னர் அது மக்கள் வாழ முடியாத பகுதியாக மாறிவிட்டது என இந்திய அரசு அறிவித்தது.
மீனவர்கள் சிலர் அங்கு குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில், புயலில் மூழ்கிப்போன தரைப்பாலம் ஒன்று தனுஷ்கோடியில் மீண்டும் தென்படுகிறது.
இந்தப் பாலம் கான்கிரீட் குழாய்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அழிந்துபோன நகரத்தின் அடையாளக்கூறுகளில் ஒன்றாக மிஞ்சியுள்ள இந்தத் தரைப்பாலத்தை சுற்றுலாப் பயணிகள் நேரில் வந்து பார்த்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.