சேலம்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரைத் திறந்துவிடுகிறார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, முதல் முறையாக கோடைக் காலத்தில் மேட்டூர் அணை திறந்துவிடப்படுகிறது.
வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். நீர்மட்டம் 90 அடியை எட்டிவிட்டால் தண்ணீர் திறப்பில் மாற்றம் இருக்காது.
இல்லையெனில், சில நாள்கள் காத்திருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.
கடந்த 1925ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் அணையில் இருந்து இதுவரை 18 முறை மட்டுமே குறித்த தேதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு கோடைக் காலத்திலேயே அணையின் நீர்மட்டம் 117 சதுர அடியை எட்டியுள்ளது. அதனால் முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
டெல்டா பாசனத்துக்கு வழக்கத்தைவிட முன்னதாகவே தண்ணீர் திறந்துவிடப்படுவது விவசாயிகளை உற்சாகப்படுத்தி உள்ளது.
தற்போது நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 491,200 ஏக்கர், கடலூரில் 30,800 ஏக்கர் என 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

