சுதந்திரத்திற்குப் பின்னர் மே மாதத்தில் அணை திறக்கப்படுவது முதல்முறை
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை மலர் தூவி திறந்து வைத்தார்.
ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து 117 அடியை எட்டியது.
இதனால் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அணையின் வலது கரையில் உள்ள எட்டு கண் மதகு வழியாக முதற்கட்டமாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அணைப்பகுதியில் இருந்த விவசாயிகளை சந்தித்த முதலமைச்சர் அவர்களிடம் மனுக்களையும் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1942,1943ஆம் ஆண்டுகளில் மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் தற்போதுதான் முதல் முறையாக மே மாதத்தில் இந்த அணை திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர்ப் பாசனம் மூலம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் 17.32 லட்சம் ஏக்கர் பரப்பளவு பாசனத்திற்கும் கால்வாய் பாசனத்திற்கும் போது மான தண்ணீர் கிடைக்கும்

