மதுரை: கோயில் விழாக்களில் ஆபாச நடனம் இருந்தால் காவல்துறையினர் உடனடியாக அதனைத் தடுத்து நிறுத்தலாம் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை நேற்று கூறியது.
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக் கோரி 100க்கும் மேற்பட்ட மனுக்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை நீதிபதி தமிழ்செல்வி நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
விசாரணை முடிவில் அவர் கூறுகையில், "ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகளோ ஆபாச நடனங்களோ இருக்கக்கூடாது. அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் காவல்துறையினர் உடனடியாக அந்த நிகழ்ச்சியை நிறுத்தலாம்," எனத் தெரிவித்தார்.
இதுபோன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் கோவில் திருவிழா ஆடல்-பாடல் நிகழ்விற்கு அனுமதி அளித்தார் நீதிபதி.

