சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் லுபன் பங்கிரே, 42, என்னும் வாலிபர் சிக்கினார்.
உகாண்டாவைச் சேர்ந்த அவர் ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விசாரணையின்போது அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்ததில் அவரது வயிற்றில் ஏதோ மர்மப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து வயிற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 63 மாத்திரைகளைக் கைப்பற்றினர்.
அவை ஹெராயின் போதை மாத்திரைகள் என தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 5 கோடியே 56 லட்சம். ஆடவரைக் கைது செய்த அதிகாரிகள் ஹெராயின் போதை மாத்திரைகளை எங்கிருந்து யாருக்காக கடத்தி வந்தார், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.