சென்னை: மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகிய இருவரது பெயர்களும் நீண்ட இடைவெளிக்குப் பின் அறிவிக்கப்பட்டது.
எதிர்வரும் ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இம்முறை தமிழகத்தில் இருந்து ஆறு பேர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், அதிமுகவில் இருந்து இம்முறை இரண்டு பேரை மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய முடியும். இதற்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அதிமுகவில் இழுபறி நீடித்து வந்தது.
வேட்பாளர் தேர்வு தொடர்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றும் இருதரப்புமே தங்களது ஆதரவாளர்களை களமிறக்குவதில் முனைப்பாக உள்ளனர் என்றும் தகவல் வெளியானது.
பத்து நாள்கள் இழுபறி நீடித்து வந்த நிலையில், பழனிசாமியின் ஆதரவு பெற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு பெற்ற முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தர்மருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது அதிமுக முன்னணி தலைவர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கட்சியில் அதிக செல்வாக்கு இல்லாதவர் என்றும் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் என்ற ஒரே காரணத்தினால் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

