சென்னை: அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து தனது தலைமையில் செயல்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகவும் இதற்கு நிர்வாகமின்மையே முக்கிய காரணம் என்றும் சாடினார்.
காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா என்று சந்தேகமாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஓர் அரசு மக்களுக்கு நல்லது செய்தாலும் சரி, மக்களுக்கு எதிராகச் செயல்பட்டாலும் சரி அதைவெளியில் கொண்டு வருவது ஊடகங்கள்தான் என்றும் அரசு தன் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர, செய்தியாளர்கள், ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்றும் சசிகலா தெரிவித்தார்.
"அதிமுகவில் இப்போது இருப்பவர்களை ஜெயலலிதாவுடன் ஒப்பிட முடியாது. கட்சித் தொண்டர்கள் முடிவு செய்து ஓர் இயக்கத்துக்குத் தலைவராக இருந்தால்தான் அந்த தலைமையின் கீழ் எல்லோரும் கட்டுப்பட்டு இருப்பார்கள்.
"ஆனால், இப்போது அதுபோன்ற நிலைமை அதிமுகவில் இல்லை," என்றார் சசிகலா.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்வதில் தாமதம் ஏற்படுவது அத்தகைய நிலைமையின் வெளிப்பாடுதான் என்று குறிப்பிட்ட அவர், கட்சித்தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் அதிமுகவில் நிலவும் குறைகளை தம்மிடம் கூறுவதாகத் தெரிவித்தார்.
"திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. ஆனால் மக்களுக்கு அது எதுவும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள்.
"கட்சியைப் பொறுத்தவரை எல்லாமே தொண்டர்கள்தான். அவர்கள் மீது இருக்கும் நம்பிக்கையில்தான் நான் அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன் என்று சொல்கிறேன்," என்றார் சசிகலா.

